பெங்களூர் சம்பங்கி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (56). இவர் மனைவி மகாலட்சுமி (44), மகன் பிரசாந்த் (26), மகள் தீபமாலா (22) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு சென்றார். தரிசனம் முடிந்து நேற்று இரவு காரில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை சத்திய நாராயணா ஓட்டி வந்தார்.
மனைவி, மகள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். சித்தூர் மாவட்டம் பலமனேடு புதலாவந்தா என்ற இடத்தில் வரும்போது காரின் பின் பகுதியில் திடீரென புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சத்திய நாராயணா நிலை தடுமாறு கார் சாலையோரம் இருந்த முள்புதரில் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கார் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது.
இந்த விபத்தில் சத்ய நாராயணா, அவரது மனைவி மகாலட்சுமி, மகள் தீபமாலா ஆகியோர் தீயில் சிக்கி அதே இடத்தில் கருகி பலியானார்கள். படு காயத்துடன் ரோட்டில் கிடந்த பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பலமனேடு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார்.
பிரசாந்திடம் இருந்த செல்போன் மூலம் விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து பலமனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment