Tuesday, October 8, 2013

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
புதுடெல்லி, அக்.9- 
மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார். 

அந்த வழக்கில் அவர், “ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு மிகச்சரியாக பதிவு ஆகி உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளும் வசதியாக வி.வி.பி.ஏ.டி. என்னும் ஒப்புகைச்சீட்டு வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார். 

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நாகலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அமல்படுத்தியதாகவும், அது வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

நிர்வாக காரணங்களையும், நிதி ஒதுக்கீடு காரணங்களையும் சுட்டிக்காட்டிய தேர்தல் கமிஷன், இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை படிப்படியாக அறிமுகம் செய்யலாம் என கூறியது. நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு 13 லட்சம் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரத்துடன் வி.வி.பி.ஏ.டி. சாதனத்தை பொருத்துவதற்கு உத்தேசமாக ரூ.1,500 கோடி செலவாகும் என தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. 13 லட்சம் எந்திரங்களை தயாரித்து அளிக்கிற தகுதி பாரத மின்னணு நிறுவனம் (பிஇஎல்) மற்றும் இந்திய மின்னணு கழகத்துக்கு (இசிஐஎல்) உண்டு என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். 

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோர் தங்களது தீர்ப்பினை வழங்கினர். தீர்ப்பில், அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை (ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் வருவது போன்று) படிப்படியாக அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். 

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் பொருத்துவதற்கு தேவையான நிதி உதவியை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்த முறையை அமல்படுத்துவதின்மூலம், சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்த முடியும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

ஒவ்வொரு வாக்காளரும் மின்னணு வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்த சில வினாடி களில், அத்துடன் பொருத்தப்படுகிற வி.வி.பி.ஏ.டி. எந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு கிடைத்துவிடும். 

அதைப் பார்த்து அவர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு பதிவாகி உள்ளது என உறுதி செய்துகொள்ள முடியும் என்பதோடு, மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் குறை கூறுவதற்கும் வழியில்லாமல் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர் இந்த ஒப்புகைச்சீட்டை கையில் எடுத்துக்கொண்டு வர முடியாது, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்படுகிற பெட்டியில் போட்டு விட்டு வந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment